மதியிடம் கேளுங்கள்
நூலகத்தில் ‘புதிய பெண்ணியம்' இதழைப் பார்த்தேன். படிப்பதற்கு நன்றாகவே இருந்தது. உலகத்திலேயே மிகச்சிறந்தது தாய்மைதான் என்பதை அனைவருமே ஒப்புக்கொள்ளும்போது பெண்ணுரிமை பேசுவதற்கு தனியாக இதழ் ஒன்று தேவையா?
-சுபாஷ், சென்னை-98.
ஒரே ஒரு இதழைப் பார்த்துப் படித்தவுடன் இத்தகைய கேள்வி உங்கள் மனதில் உருவாகிறது என்றால் வெளிவந்த அனைத்து இதழ்களையும் படித்திருந்தால், எத்தனை கேள்விகள் உங்களிடமிருந்து வந்திருக்கும் என்கிற நினைவுதான் சட்டென்று எழுந்தது. ஒருவேளை பெண்ணியம் இதழ்களைத் தொடர்ச்சியாகப் படித்திருந்தால் இந்தக் கேள்வியே கூட உங்களிடம் எழாமலும் போயிருக்கலாம் என்று இன்னொரு நினைவும் தொடர்ந்து வந்தது.
உலகத்திலேயே மிகச்சிறந்தது தாய்மைதான் என்பதை மறுப்பதற்காகவேதான் புதிய பெண்ணியம் இதழ் தொடங்கப்பட்டிருக்கிறது என்ற பதில் நீங்கள் எதிர்பாராததாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான். தாய்க்குலம், தாய்மை என்கிற பட்டத்தையெல்லாம் ஆண்கள் பெண்களுக்குக் கொடுத்ததற்கு மிகப்பெரிய காரணம் இருக்கிறது. பெண்ணின் கையிலிருந்த செங்கோலைப் பிடுங்கித் தனதாக்கிக் கொண்டு அவளிடம் ஊன்றுகோலைக் கொடுத்த உண்மைக்கதையே இது. ‘சிறப்புமிக்க' தாய்மைப்பட்டம் எனும் ஊன்றுகோலைக் கொடுத்ததோடு நின்றுவிடாமல், அதனைப் பயன்படுத்தி எப்படி நொண்டி நொண்டி நடக்க வேண்டும் என்று விடாப்பிடியாகக் காலம் காலமாகப் பயிற்றுவித்து வந்ததில் பெண்ணினமே ஊனப்பட்டுப் போனது.
மனிதகுலத்தின் சரிபாதியான பெண்ணை ஊனமாக்கி விடும்போது, ஒட்டுமொத்த சமூகமும் ஏற்றத் தாழ்வுக்குள்ளாகிவிடும் அல்லவா? அப்படிக் கட்டியமைக்கப்பட்டதுதான், இப்போது இருக்கின்ற இந்த ஆணாதிக்கச் சமூக அமைப்பு. பெண்கள் எப்போதுமே விழிப்படையாமல் இருப்பதற்கும் அவர்களைக் கட்டுக்குள் வைக்கவும், கட்டிப்போடவும் கொடுத்த பட்டம்தான் தாய்மை. சமத்துவம் நிறைந்து, ஏற்றத்தாழ்வு மறைந்த ஒரு சமூகத்தில் ‘தாய்மை' என்பது வெறும் ஒரு நிகழ்வே. இதைத் தொடர்ந்து விளக்கிச் சொல்லவும் புதிய பெண்ணியம் வெளிவருவது அவசியமாகிறது.
உலகத்திலேயே மிகச்சிறந்தது தாய்மை என்பதற்குப் பதிலாக இரு பாலார்க்கும் பொதுவாக ‘கள்ளங்கபடம் கலக்காத மழலையின் சிரிப்பு'’ என்று வைத்துக் கொள்வோமே!
‘கற்பு ஒரு மாயை' என்று சொன்ன பெரியாரின் பெண்விடுதலைக் கருத்துக்களை வளர்த்தெடுத்து வரும் பணியை புதிய பெண்ணியம் இதழ் செய்கிறது. ஆனால் பெரியாரின் ‘திராவிடமே ஒரு மாயை' என்பதாக ஒரு கட்டுரையைப் படித்தேன். இதில் உங்களது கருத்து எதுவென அறிய ஆவல்.
-கலை, நெய்வேலி.
சில ஆண்டுகளுக்கு முன்பு, எப்போதோ ஒரு முறை, ஏதோ ஒரு இதழில் இது குறித்துப் படித்தது இப்போது நினைவுக்கு வருகிறது. அந்த நாட்களில் அவற்றையெல்லாம் ஆழ்ந்து படிக்கத் தேவை இல்லாத காரணத்தாலோ அல்லது சூழல்களின் கடுமையினாலோ அதனைக் கவனத்தில் கொள்ள முடியாமல் போனது. என்றாலும் அந்நாளிலேயே அதற்குய பதிலை யாரேனும் பெரியாரியவாதிகளோ அல்லது திராவிட அமைப்புகளோ அளித்திருக்கக் கூடும் என்றே நம்புகிறோம்.
அக்கேள்வி இப்போது நம்மை நோக்கியும் வந்திருக்கிறது என்பதால் மனதில் படுவதைச் சொல்லி வைப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. எந்தவொரு அமைப்பிலும், கருத்தோட்டத்திலும் நிறை குறைகள் இருப்பதென்பது இயல்பான ஒன்றுதான். திராவிடக் கருத்தாக்கத்திலும் அவை இருக்கலாம். ஆனால் அதற்காக அன்றைய சூழலில் உருவான திராவிடத்தையே மறுப்பதென்பது வரலாற்றிற்கு எதிரான பார்வையாகவே இருக்கிறது. பெரும்பாலும் குறைகளை மட்டும் உயர்த்திப் பிடிப்பவர்களே வரலாற்றினை மறுக்கும் மனப்பாங்குடைய வர்களாக இருக்கிறார்கள். இதனையெல்லாம் விவாகச் சொல்ல இங்கு இடமும் இல்லை; அதற்கான தேவையும் இல்லை. இருந்தாலும் உறுதியாக ஒன்றை மட்டும் சொல்லி வைக்கலாம். ஓர் இருபது வயது இளைஞன். அவனைச் சுற்றிலும் பல பிரச்சனைகள். அவனது தந்தையோ மகனின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறையற்று, பொறுப்பற்றுத் திரிகிற ஒரு நிலைமை நிலவுகிறது. இளைஞன் என்ன செய்ய வேண்டும்? தேடல், உழைப்பு, விடாமுயற்சி இவற்றைக் கைக்கொண்டு பிரச்சினைகளின்றும் விடுபட வழி காணவேண்டும். ஆனால் இளைஞனோ சலித்துக் கொள்கிறான்: "எங்க தாத்தாவுக்கு அறிவே இல்லை; அவர் இப்படி ஒரு மகனைப் பெற்றெடுத்ததால்தான் நான் இத்தனை துன்பப்பட வேண்டி இருக்கிறது’ என்று. பெரியாரைக் குறை கூறுவதும் இப்படித்தான் இருக்கிறது என்பதே நமது முடிவான கருத்து.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|